Monday 11 November 2013

எப்போதாவது
உடன் வரும் நண்பனொருவன்
தொண்டைக்குழி கடித்து
குருதியுறுஞ்சுவான்..!

வாரம் இருமுறை
புதர்களில் வல்லுறவு நிகழ்த்தப்பட்ட
பெண்ணொருத்தி நடுச்சாலையில்
வீசியெறியப்படுவாள்….!

பேரம் படியாத பள்ளிச்சிறுவர்களை
தண்டவாளத்தின் ஓரம்
ஞாயிற்று காலைகளில் சீருடையோடு
கண்டெடுக்கலாம்..!

இரவுக்காவலன்
துருப்பிடித்த கத்தி சுழற்றியபடி
உதடுவழியும் ரத்தத்துளிகளோடு
தினமும் வலம் வருவான்..!

உத்தமச்சாயல் தென்படும்
ஓரிருவரையும்
பகலிரவு பாராது
குரைத்துத்தபடி
துரத்தும் தெருநாய்கள்..!

மாதம் ஒருமுறை
பெரும்பொருள் வேண்டி
ஆதிகாளிக்கு ஆண்மகவு
பலியிட்ட தந்தையொருவன்
புன்னகைத்தபடியே
சிறை செல்வான்…!

மற்றபடி
இந்த வீதியில் ஒருவனாய்
வாழ்வதில் எனக்கொன்றும்
முறையீடல் இல்லை…!

No comments:

Post a Comment